Thursday, October 16, 2014

274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 8-வது பகுதி.

274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 8-வது பகுதி.
திருநாரையூர் கோவிலின் நிலைமை என்னை மிக தடுமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது. அதன் காரணமாக திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் செல்ல மறந்து அதை கடந்து இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் நோக்கி சென்றேன்.
வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. மீண்டும் பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவன் பற்றிய நினைவு வருகிறது. வரலாறு இந்த வழியாக பல முறை கடந்து சென்று இருக்கும். குறைந்தது இருபது கிலோமீட்டர் வரை ஏரி நம்முடன் பயணம் செய்கிறது.
இடது பக்கம் ஒரு இளவரசி நம்மை பார்த்து நமுட்டு சிரிப்புடன் வழி நெடுக படுத்து கிடப்பது போல் ஒரு உணர்வு. அசாதாரணமான அழகு. ஆனந்தமான இரு சக்கர வாகன பயணம். காதிலோ ஈசன் புகழ் சொல்லும் பாடல்கள் அலைபேசியில் இருந்து. உற்சாகமாய் நானும் பாடி கொண்டே சென்றேன்.
நான் சென்ற நேரம் நடை அடைக்கப்பட்டு இருந்தது. எதிரே குளம். சிறுவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். சில பேர் குளித்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி குளித்து கொண்டு இருந்தவர்களில் கோவிலில் அர்ச்சகரின் பையனும் இருந்தார். நம்மை பற்றி சொன்னவுடன் ,சிறிது நேரம் பொறுங்கள், நான் போய் சாவி வாங்கி வருகின்றேன் என்றார். சொன்னபடி செய்தார்.
அன்பாய், பணபாய் நடந்து கொள்கிறார். +12 படிக்கிறார். எதிர்காலதில் என்ன படிக்கலாம் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார். ராணுவத்தில் பணி புரியும் விருப்பத்துடன் உள்ளார். எனக்கு தெரிந்த பதிலை சொன்னேன். அர்ச்சகர் மகனை நல் படி வளர்த்துள்ளார் என்ற புரிகிறது.
கோவிலை சுற்றி திருமாலின் அவதாரத்தில் ஒருவகை ஓடிக் கொண்டு இருந்தது. வரலாற்றின் வரலாறு இந்த கோவிலுக்கு வந்து இருக்கிறது. ராஜராஜ சோழன் இங்கு வந்து ஈசனை வேண்டிய பிறகு, தமிழ் வரலாற்றின் உச்சம் திரு இராஜேந்திர சோழர் பிறந்தார், ஆகவே ராஜேந்திர பட்டினம் என்று பெயர் பெற்றது.
தாயை தண்டிக்க காரணமாக இருந்த வேத நூல்களை முருகன் வீசி எறிய , ஈசன் சினந்து குமரனை ஊமை குழந்தையாக மண்ணில் பிறக்க வைக்க, இக்கோவில் வந்த வேலன் அந்த வேத நாதனை வழிபட்டு பேச்சு பெற்ற தலம். ஆனால் ஈசனை கண்டதும் நாம் ஊமையாகி போகின்றோம்.
கயிலை நாதனை கண்டால் கவலைகள் கழண்டு போகிறது. நம் கண் முன்னே ,நம் மனம் திருடப்பட, கள்வன் யார் என்று தெரிந்த பிறகும், அவனை கண்டிப்பதற்கு பதில், கைகள் அவனை தொழுகின்றன. சிறிய கோவில். நிதியுதவி தேவைப்படும் கோவில்.
பொது சாலையில் இருந்து , மிக அருகே உள்ள கோவில். ஆனால் அதை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தினால் , பெரிய அளவில் கோவில் கண்டுகொள்ள பட வில்லை. ஒரு பெரிய தகவல் பலகை , பொது சாலையில் வைத்தால், கண்டிப்பாக இந்த கோவில் நல்ல கவனத்தை பெறும். அதற்கு சில பேர் அங்கே முட்டுகட்டையாக இருப்பார்கள் என்று பயந்து கொண்டு , கோவில் நிர்வாகம் செய்யாமல் இருக்கிறது என்பதை விசாரித்து அறிந்து கொண்டேன்.
சொந்த மண்ணின் வரலற்று சின்னத்தை மறைக்க விரும்பும் மனிதர்களை நினைத்து எங்கே போய் முட்டி கொள்ளுவது என்ற எண்ணத்துடன் வெளியே வந்தேன்.
பயண திட்டத்தை பார்க்க, திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் பார்க்க மறந்தது தெரிய வர, மீண்டும் வந்த வழி சென்று, வல்லபேஸ்வரர் திருக்கோயில் அடைந்தேன்.
கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கோவில் அருகே அர்ச்சகர் வீடு. அரசாங்கத்திடம் இந்த கோவில் இல்லை. ஆதலால், நகரத்தார் இந்த கோவிலுக்கான கும்பாபிசேகம் தயார் செய்து கொண்டு உள்ளனர். ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. நாவலனின் (ஈசன்) நர்த்தனம் காண, பிரம்மா, சரஸ்வதி வந்து வழிபட்ட தலம், குறுமுனி அகத்தியர் தான் படித்த வேதங்கள் மறக்காமல் இருக்க இறையை வேண்டிய இடம். அகத்தியரின் மகளாக மகாலட்சுமி பிறக்க, வராக அவதாரத்தில் வந்து விஷ்ணு லட்சுமியை மணந்த இடம்.
கும்பாபிசேகம் நடக்க இருப்பதால், யாருக்கும் பூஜை இல்லை. தனியாக ஓலை குடிசை அமைத்து , ஆகம விதிப்படி பூஜை செய்கிறார்கள். அலங்காரம் எதுவும் இன்றி ஆராவமுதன்(ஈசன்) அமர்ந்து உள்ள, யாரும் இல்லாத காரணத்தினால் , சௌகரியமாக நின்று, ஈசனிடம் பேச முடிகிறது. பிடிப்பு அற்ற வாழ்க்கை, பனிமலையன் (ஈசன்) பக்கம் நிற்கும்போது , ஒரு பக்குவத்திற்கு வருகிறது.
அறியாமல் செய்த பிழைகளும், அறிந்தே செய்த பிழைகளும், மனதில் எங்கும் அலைகின்றன. நாயன்மார்கள் காலம் போல், மீண்டும் உடல் எடுத்து இங்கே உலவ வர மாட்டயோ என் ஈசனே என்ற ஏக்கம் வருகிறது. நிலை கொள்ள முடியாமல், நின்ற மனம், ஈசனிடம மண்டியிட்டு வெளி வருகிறது. என்னால் முடிந்த நிதியுதவி அளித்து விட்டு வெளியேறினேன்.
நண்பகலை தாண்டி இருந்ததால் , செல்லும் வழியில் ஜந்து இளநீர் வாங்கி அருந்தி விட்டு, மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் கோவிலில் சற்று நேரம் கண் அயர்ந்தேன். 







274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 7-வது பகுதி

274 பாடல் பெற்ற தலங்களின் 2-வது சுற்றின் 7-வது பகுதி
அதிகாலை எழுந்து, குளித்துவிட்டு , பயண திட்டத்தில் இல்லாத பாடல் பெற்ற தலமான வைத்தியநாதர் திருக்கோயில் , மயிலாடுதுறை தரிசிக்கலாம் என்று கிளம்பினேன்.
செவ்வாய் தோஷம் நீக்கும் கோவில் என்று சொன்னால், எல்லாருக்கும் புரியும். 6.00 am அளவில் கோவில் சென்று அடைந்தேன். மழை மண்ணை மகிழ்வித்து இருந்தது. கூட்டம் அதிகம் இல்லை. முருகன் முக்கண்ணனை வழிப்பட்டு தாயிடம் இருந்து வேல் பெற்ற இடம். சடாயுவிற்கு ராமர் தகன காரியங்கள் செய்த இடம்.
செவ்வாய் சிறப்பு என்பதால் முருகன் முன் நல்ல கூட்டம். தங்களை விடுத்து மைந்தன் கொண்டாடபடுவதை கண்டு அம்மையும்,அப்பனும் அக மகிழ்ந்து அமர்ந்து உள்ளனர். ஈசன் சந்நிதியில் யாரும் இல்லை. உலகத்தின் உச்சம் , உக்காந்து இருக்கிறது எந்த சலனமும் இல்லாமல். நீயே என் அதிபதி என ஆன பிறகு என் தலைவிதி பற்றி எனக்கான கவலை என்ற எண்ணம் வருகிறது.
விழி நீர் விழியன் விளிம்பில் நிற்க, தீடிரென்று விளக்குகள் அணைந்து போய், ஈசன் தீப ஒளி காட்டுகின்றான். தகப்பனை தொழுதுவிட்டு விட்டு தாயிடம் சென்றால், திரை போட்டு வைத்து இருக்கிறார்கள் தாயை.
சுற்றி வரலாமா என்று சிந்தனை வரும் போது, சற்றென்று திரை விலகி தீப ஆராதனை நடக்கிறது. தையல் நாயகியின் முகம் பார்த்தால் தைரியம் வருகிறது. அழகு இவளுக்கு அடிமையாகி ஏவல் செய்கிறது. தையல் நாயகன் , இவள் மீது மையல் கொண்டு திரிவது தவறே இல்லை. அழகின் முகம் அன்பை அள்ளி தருகிறது.
சுற்றி வந்தேன். கோவிலை இன்னும் நன்றாக வைத்து கொள்ள நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணத்துடன், ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் நோக்கி விரைந்தேன்.
கொள்ளிடம் ஆற்று வழி பயணம், பொன்னியின் நாவல் சொல்லும் ஊர்கள் தென்படுகின்றன. கொள்ளிடம் வறண்டு போய் வெறுமை காட்ட, மனம் கசக்கி எறியப்பட்ட காகிதம் போல் சுருங்குகிறது. வளைந்து ஓடிய வரலாறு இங்கே வீழ்த்தப்பட்டு கிடக்கிறது. பாலத்தில் வண்டியை நிறுத்தி சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன். பலத்காரம் செய்து கொல்லப்பட்ட பருவமங்கை போல் பாழ்பட்டு கிடக்கிறாள் கொள்ளிட ஆறு. மனிதன் இயற்கையின் மிக பெரிய மிருகம் என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.
கோவில் செல்லும் வழியில் ஒரு சிறு ஆறு எதிர்திசையில் இரண்டாக பிரிந்து வருகிறது. இரண்டு சின்ன சிறுமிகள் போல், நம்மின் இரு கைபிடித்து ஈசன் கோவில் செல்லும் வழி கூட வருகிறது.
ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், கோவில் ஆள் அரவமற்று இருக்கிறது. ஈசன் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் சொல்லும்போது , தாயாரின் கவனம் திசை தப்ப, தண்டித்தான் ஈசன். தாய் இங்கு தவம் இருந்து தனது மணவாளனை மீண்டும் பெற்ற இடம். ரேவதி நட்சத்திர பரிகார தலம்.
ஓரளவு நல்ல நிலைமையில் கோவில் உள்ளது. அந்த சமயத்தில் மின்சாரம் இல்லை கோவிலில். அர்ச்சகர் தீபம் காட்டி விட்டு போய் விட்டார். நல்ல இருட்டு, கருவறை அருகே தனியாக நிற்க நடுக்கம் வருகிறது. உதடுகள் பிரிந்து உள்ளம் கவர்ந்தவனின் பெயர் சொல்ல, பயம் மெதுவாய் பதுங்கி மறைகிறது. மெல்ல நெருங்கி கருவறை கதவிடம் போய் நின்றால், காலனின் அருகாமை கரும்பாய் உள்ளே இனிக்கிறது.
சுற்றி வந்தால் எந்த பிழையும் இல்லை கோவிலில். இங்கே குரு அம்மைக்கும் அப்பனக்கும் நடுவில் நிற்கிறார். இறையின் எம்முகம் பார்த்தாலும் இனிமை தான். கோவில் நேர் எதிரே குளம் உள்ளது. குளம் தாண்டி சிறிய சிவன் கோவிலில் பெரிய லிங்கம் ஒன்று உள்ளது. வயதான அர்சகர் அங்கும் நாயன்மார் வந்த கதை சொல்கிறார். எந்தளவு உண்மை என்று புரியவில்லை. நிதி இல்லாமல் நிற்கதியில் உள்ளது. முடிந்தளவு பண உதவி செய்து விட்டு வந்தேன்.
கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், வயல் சூழ்ந்த கிராமத்தின் உள்ளே நிற்கிறது ஆலயம். நான் போகும் போது நடை அடைக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தை ஒட்டி அமைந்த ஒரு வீடு தள்ளி உள்ள வீட்டில் விசாரித்தால் , அவர்களே கோவில் நிர்வாகத்துக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நமது வருகையை தெரியபடுத்த , 20 நிமிடத்தில் ஒருவர் வந்தார்.
என்னையே ஆலயம் திறக்க சொன்னார். மனம் குதூகலம் அடைந்தது. இன்று நீங்கள் தான் ஆலயம் திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது போலும் என்றார். ஆலயம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு உள்ளது. முனிவர்கள் சிவ பூஜை செய்ய வந்த போது, மணல் எல்லாம் லிங்கமாக தெரிய வெளி நின்று தரிசித்த தலம், ஆதிசேசன் , பதஞ்சிலி முனிவராக பிறந்து இங்கு வந்த போது, ஈசன் தனது நடன காட்சியை காட்டிய இடம்.
பதமாக நிற்கும் ஈசன் நமக்கு இதம் தருகின்றான். உடல் கொண்ட உயிர் ஈசன் முன் நிற்கும்போது , சவமாய் சரிகிறது. உற்சாகம் காட்டும் பொருள் எல்லாம் சுற்றி நிற்க, சுட்டித்தனம் காட்டும் குழந்தை , பொம்மையை மட்டும் தழுவ விரும்பவது போல், ஈசனின் பாதம் சென்று மனம் அவனையே கட்டி தழுவுகிறது பின்பு நழுவுகிறது.
கார்த்திகை நட்சத்திர பரிகார தலம். தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை ஈசன் மீது பரப்பும் நிகழ்வு இன்றும் நிகழ்வது இயற்கை தன் நிலையில் சரியாக நிற்கிறது என்ற அறிவியல் கண்ணோட்டம் கொண்டு ஆலயத்தின் சிறப்பை விளக்குகிறார் ஜெயசந்திரன். அவரது நம்பர் 9790333377.
மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஆலயத்தை புன நிர்மாணம் செய்து இருக்கிறார். ஈசன் மேல் கொண்ட பக்தி அவர் பேச்சில் வழிகிறது. என்னால் ஆன நிதியுதவி செய்து விட்டு திரு நாரையூர் புறப்பட்டேன்.

திரு நாரையூர் பற்றி ஏற்கனவே தனியாக தனி பதிவு இட்டு உள்ளேன்.








கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...