Wednesday, October 8, 2014

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 2-வது சுற்றின் 2-வது பகுதி.


இரவு 9 மணியை நெருங்கியது. இந்த முறை கோவிலில் இரவு படுத்து உறங்கும் திட்டம் இல்லை. சென்ற முறை கோவிலில் இரவு படுத்து உறங்கியதற்கு, தந்தையிடம் இருந்து கடும் எதிர்ப்பு. பாதுகாப்பு பற்றிய அவரின் கவலை புரிந்து கொள்ள கூடிய ஒன்று. தங்கும் விடுதியை திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் அருகே தேடிக்கொள்ளும் எண்ணத்துடன் கோவில் இருக்கும் தெருவில் போனால் , கோவில் திறந்து இருந்தது.
உற்சாகமாக உள்ளே சென்றேன். சற்றே பெரிய கோவில்.லட்சுமியின் கடாஷம் ஆலயத்தை அரவணைத்து உள்ளது. அப்பரை கல்லுடன் கட்டி கடலில் எறிய, ஈசன் புகழ் பாடி கல்லை கட்டு மரமாக மாற்றி கரை ஏறிய அப்பர், இந்த திருகோவிலில் தான் முதலில் நுழைந்து பதிகம் பாடினார்.
முல்லைவன நாதனை (ஈசன்) கண்டால் மூச்சே நின்று போகிறது. தாமரை மாலை சூடி நம்மை தவிக்க விடுகின்றான். அர்ச்சகர் பார்த்தவர் நகர்ந்து போகலாம் என்று சொன்னாலும், கால்கள் நகர மறுக்கின்றன. அழகிற் சோதியான் அம்பலத்தில் ஆடுவான் என்ற பாடல் மனதின் உள்ளே ஒலிக்கிறது. உள்ளே நுழைபவர்கள் உருத்திரனின் உருவழகை கண்டு உறைந்து போகிறார்கள் என்பதை அவர்கள் விழித்திரையின் விரிவே வியப்பாய் நமக்கு சொல்கிறது.
திருக்கோவில் சுற்றி வர பேரானந்தம். பிறைச்சென்னியன் (ஈசன்) ஆலயம் பொலிவுடன் உள்ளது. சிவன் சித்தராக வந்து விளையாடிய குளம் கண்டேன்.
வெளியே வந்து , தங்கும் விடுதி எடுத்து, நன்கு உறங்கினேன். காலை எழுந்து ஆயுத்தமாகி, திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் நோக்கி விரைந்தேன்.
ஆலயம் செல்லும் வழியில் ஓலையாறு என்ற ஆறு வருகிறது. நளினமாய் வளைந்து வளைந்து போகிறது ஆறு. திரைப்படங்களில் வரும் அழகான கிராமம் போல் இருக்கிறது. கிராமமே இப்படி என்றால், கோவில் எப்படி இருக்கும் என்ற ஆசையில் போனால், ஆலயத்தை கண்டவுடன், சுக்கல் சுக்கலாக மனம் சிதறுகிறது. ஈசனை சுமந்து சுற்றும் தேர் சிதிலமாகி ஆலயம் முன் அனாதையாக உள்ளது. கோவில் அடைக்கப்பட்டு இருந்தது. ஏழு மணி ஆனாலும் திறக்கும் அறிகுறி இல்லை. விசாரித்து கோவில் மணியக்காரர் வீடு கண்டுபிடித்து ஆலயம் திறக்க வேண்டினேன்.
சரஜோ என்ற அம்மையார் வந்து கோவில் திறந்தார். பிரமாண்டமான கோவில் , மயான அமைதியுடன் உள்ளது. பூஜைகள் மிக மிக சிறிய அளவில் தான் நடைபெறுகின்றன என்பதை கோவில் சொல்கிறது. எவன் எக்காலத்திலும் அழியாதவனோ அவன் கோவில் அழிவை நோக்கி உள்ளது.
கடல் சீற்றத்தில் புதையுண்ட கோவில், சிவ பக்தர் ஒருவரால் மீட்கபட்டு , புன நிர்மாணம் பெற்று , பின் இன்று மீண்டும் அழிவை நோக்கி உள்ளது.
அகத்தியர் செய்த மணல் லிங்கம். நீர்ச்சடையன் (ஈசன்), நம் நினைவை எல்லாம் நிறுத்துகின்றான். தீப ஆராதனை காட்டி அம்மையார் பிரசாதம் கொடுத்தார். நன்றி சொல்லிவிட்டு கோவில் சுற்றி சுற்றி வர வர அழுகை வந்தது. கோவில் சுவர் எல்லாம் கிறுக்கி வைத்திருந்தது ஒரு கீழ்த்தரமான கூட்டம்.
சம்பந்தராலும், அகத்தியராலும் கொள்ளப்பட்ட கோவில் மக்கி கொண்டு இருக்கிறது. "இதற்கு நீ மண்ணுக்கு உள்ளே புதைந்து போய் இருந்து இருக்கலாம். பூமித்தாய் உன்னை பூவாய் பாதுகாத்து இருப்பாள், எங்கள் மனிதர்களுடன் வாழ ஏன் முற்பட்டாய் என் ஈசனே" என்று புலம்பி விட்டு , என்னால் ஆன நிதியுதவியை கோவிலுக்கு அளித்து விட்டு அடுத்து கோவில் நோக்கி பயணித்தேன்.
குறிப்பு: மங்களபுரீஸ்வரர் கோவிலில் எடுத்த 7 புகைப்படங்களை இணைத்து உள்ளேன். சுருக்கமாய் எழத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கோவில் நிலைமை பற்றி விரிவாக சொல்ல வேண்டும் என்பதால் இரண்டு கோவிலே பதிவை முழுதும் எடுத்து கொண்டது







274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 2-வது சுற்றின் 1-பகுதி

மீண்டும் ஓர் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு ஒரு இரண்டரை நாட்களுக்கான இரு சக்கர வாகன பயணத்திட்டம். இந்த முறை சென்னையில்இருந்து பாண்டிசேரி ஆரம்பித்து சிதம்பரம், சீர்காழி , கடலூர் வழியாக காரைக்கால் தொட்டு , மீண்டும் விருத்தாச்சலம் வழியாக , சென்னையை அடைய வேண்டும் என்பது திட்டம்.
திட்டம் நமதாக இருந்தாலும் , அதை தீர்ப்பது ஈசன் கையில்.
வெள்ளிக்கிழமை மதியம் சென்னை திருவான்மியூர் மருந்திஸ்வரை வணங்கி விட்டு இரு சக்கர வாகனத்தை திண்டிவனம் வழியே திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி நோக்கி செலுத்தினேன்.
சென்னையில் இருந்து 169 KM தொலைவில் அமைந்த ஆலயம். நான் சென்ற போது, நடை அடைக்கப்பட்டு இருந்தது. வெயிலில் பயணித்த காரணத்தால் மிக தளர்ச்சியாக இருந்தால், கோவில் வாசலில் அமர்ந்து உடன் களைப்பு மிகுதியால் அயர்ந்து விட்டேன்.
சற்று நேரத்தில் மாடு வந்து எனது டிராவல் பையை முகர்ந்த அதிர்ச்சியில் விழிப்பு வந்தது. கோவில் நடை திறந்து இருந்தது. முகத்தை கழுவி விட்டு, கோவில் உள்ளே நுழைந்தேன். ஈசன் பிரம்மாவின் தலையை கிள்ளி எறிந்து ஆணவத்தை அழித்த இடம். அழகான கோவில். நான் ,ஈசன், அர்ச்சகர் தவிர யாரும் இல்லை. ஆண்டவனை காட்டி விட்டு அர்ச்சகர் வெளியேற , நான் மட்டும் ஈசன் அருகே. என்ன கொடுப்பினை என்று மெல்ல ஆணவம் தலையில் ஏற, சட்டென்று மீண்டும் வந்த அர்ச்சக்கர் கணிரென்று சொன்னார், ஆணவம் அழிய வேண்டி கொள்ளுங்கள் என்று.
முதல் கோவிலே நடு தலையில் நச்சென்று கொட்டியது. கேட்க எதுவும், தோணாமல், மனம் குளிர மகேசனை பருகிவிட்டு மெல்ல கருவறை விட்டு வெளியேறினேன். கோவில் நல்ல பராமரிப்பில் உள்ளது.
'திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்-. இந்த கோவிலுக்கு செல்லும் போது, மாலை மங்க தொடங்கி விட்டது. ஒரளவு நல்ல சாலைகள், ஆனால் தெருவிளக்கு எதுவும் எரிய வில்லை. பயணம் மிக கடினமானது. தட்டு தடுமாறி கோவிலை சென்று அடைந்தால், மின்சாரம் இல்லை கோவிலில். குறைவான கூட்டம். ஈசனை தோழராக பெற்ற சுந்தரர், இந்த தலத்திற்கு வரும் போது, ஈசன் இங்கே குருவாக அமர்ந்து தோழருக்கு தவநெறி பாதையை காட்டுகிறார்.
மின்சாரம் இல்லாமல் போனாலும், லிங்க திருமேனி அகல் விளக்கால், கண்ணுக்கு அமுது ஊட்டுகிறது. சுந்தரர்க்கு வந்திரே, இந்த சுகந்தனுக்கு வர மாட்டீரோ என்று மனம் சிறை பட்ட பறவை போல் சிறகடித்து படபடக்கிறது. குரு என்று வர நான் நல்ல சீடனா என்ற கேள்வி எழும்பி, நான் செய்த பாவத்தின் பக்கங்களை எனக்கே படித்து காட்டுகிறது.
சுய பச்சாதபம் கொண்ட மனம், ஈசனின் முன் நிக்க நாணி, கோவிலை சுற்ற சொல்லி உடலை நகர்த்துகிறது. சுற்றி வந்தால் கோவிலின் நிலைமை மிக மோசம் இல்லை. பூஜைகள் சரியாக தான் நடைபெறுகின்றன. விமர்சையாக இல்லை என்றாலும், ஒரு நிம்மதி வருகிறது.
'திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர். ஈசனின் வீர செயல்கள் நடைபெற்ற அட்ட வீரட்டானத் தலங்களில் இதுவும் ஒன்று. ராஜராஜ சோழன் வந்த கோவில். இதை பார்த்து தான் தஞ்சை கோவிலை கட்டியதாக கோவில் குறிப்பு சொல்கிறது. இறை ஒரு புன்சிரிப்பில் , திரிபுரசுந்தர அசுரர்களை எரித்த இடம். தியானத்தில் அமர்ந்த ஈசனே அழகின் உச்சம். புன் முறுவல் பூத்த புவனநாதன் (ஈசன்) பூரிப்பாய் நிற்கின்றான். பெரிய கோவில். குறை ஒன்றும் இல்லை கோவிலுக்கு.
'திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்-கடலூர். சிதம்பரம் செல்லும் சாலையில் சற்று உள் ஒடுங்கி உள்ளது. இங்கும் மின்சாரம் இல்லை. இங்கே கருவறையே பள்ளியறையாக உள்ளதால், இரண்டு வினாடிகள் மட்டுமே தரிசினம். பிரதமரே வந்தாலும் இரண்டு வினாடிகள் தான். ஆலவாய் அண்ணல் (ஈசன்) அம்மையுடன் இணைந்தே உள்ளான். வினாடிக்கு குறைவான நேரம் என்றாலும் , விளக்கின் ஒளியில் ஈசன் விழியோடு இழைகின்றான்.
அருள் சூழ்ந்து வலம் வரும் நேரம், இருள் சூழ்ந்து கோவில் இருக்கிறது. ஈசனை நினைத்து கொண்டு பிரகாரம் சுற்றி வந்தேன். மங்கலான நிலையிலும் கோவில் நிதி இல்லாமல் இருக்கிறது என்பது புரிகிறது. திருமால் எப்போதும் ஈசனை இங்கே தியானித்து கொண்டு இருக்கிறார். இறையின் அருகே எப்பொதும் அமரும் தருணம் நமக்கு எப்போது வாய்க்குமோ என்ற கலக்கத்துடனே , சிதம்பரம் நோக்கி இரவை கழிக்க வாகனத்தை செலுத்தினேன்.

274 சிவலயங்களுக்கான- 2 வது சுற்று -திரு நாரையூர் கோவில் நிலைமை.

274 சிவலயங்களுக்கான- 2 வது சுற்றில் , இந்த முறை, கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி , காரைக்கால், மயிலாடுதுறையில் உள்ள சிவன் கோவில்களை தரிசித்து வந்தேன். பெரும்பாலான கோவில்கள் என்ன நிலைமையில் இருக்கிறது என்று நான் எழுதுவதற்கு முன், முதலில், தேவாரம் கிடைக்க காரணமான நம்பியண்டவார் வாழ்ந்த



திரு நாரையூர் கோவிலின் நிலைமை என்ன, நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த இடத்தின் நிலைமை இன்று என்ன என்று நாம் தெரிந்து கொள்வது ஒவ்வரு ஹிந்துவின் கடமை.
ஈசன் நாரைக்கு முக்தி கொடுத்த தலம், பொல்லா பிள்ளையார், நம்பிக்கு , அது இறையின் பிள்ளை என்று சொன்ன இடம். தேவாரம் கிடைக்க இவரே காரணம். ஒவ்வரு சிவச்சரியர்களும், சிவ பக்தர்களும் நம்பிக்கு கடன் பட்டவர்கள். நம்பியை புறந்தள்ளி தேவாரத்தை மட்டும் நாம் கொண்டாட முடியாது.
ஆலயத்தை பற்றிய மிக பெரிய எதிர்பார்ப்புடன் போனால், அதிர்ச்சியாக இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் தோய்ந்து போய் இருக்கிறது. ஆனால் ஈசன் இன்முகம் காட்டுகின்றான். மகனை தரிசித்து விட்டு அப்பனை தரிசிக்க வேண்டும் என்ற முறை கொண்டு, கால்கள் பொல்லா பிள்ளையார் நோக்கி செல்கின்றன. பொல்லா பிள்ளையார் பொலிவுடன் இருக்கிறார். மௌனமாய் நிற்கிறார்.
தேவார சுவடிகள் இருக்கும் இடம் காட்டிய மகாதேவனின் மைந்தன் அல்லவா இவர். கோவிலை காப்பாறும் வழியை சுட்டிக்காட்டு என்று மனம் வேண்டுகிறது. மைந்தனை விடுத்து அப்பனிடம் நகர்ந்து செல்கின்றேன்.
ஈசனை பற்றி எப்படி சொல்வது. சாந்தமாய் சலனமற்று அமர்ந்து நமது சித்தத்தை சிதறடிக்கிறார். சிந்திக்கும் திறன் இந்த சவுந்தர்யேஸ்வரர் முன் நிற்கும்போது சரிந்து விழுகிறது. விழுந்த மனம் ஈசன் பெயர் சொல்லி அலறுகிறது. ஈசன் தாள் பிடித்து மெல்ல எழும்புகிறது. தீபத்தின் சுடர் ஒளி , ஈசனின் மீது படர்ந்து பாய , "தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்" என்ற தேவார வரிகள் நினைவுக்கு வருகின்றன.
அப்பனை விடுத்து அம்மையிடம் வருகின்றேன். பெரிய அலங்காரம் எதுவும் இன்று அம்மை நிற்கின்றாள். ஏழைத்தாய் என்று அழைக்கும் அளவில் இருந்தாலும் , எழில் அரசி இவள். ஏழைத்தாய் என்றாலும். இந்த ஜகத்தின் தாய் அல்லவா. தன் கணவனின் இருப்பிடம் நிலை கண்டு கவலை கொண்டு இருப்பதாக தோன்றுகிறது. திரிபுரசுந்தரி என்று பெயர் கொண்டவளின், திருமுகம் வாடிய தாமரை போல் இருக்கிறது. பிள்ளைகள் தாயின் தொய்வான முகம் கண்டு வருந்த நேரிடம் என்று எண்ணத்தால் என்னவோ, இருளில் தன் முகத்தை மறைத்து கொண்டு அம்மை நிற்கின்றாள்.
என்னுடைய பொருளாதார இயலாமை எண்ணி மனதிற்குள் வலி வருகிறது. அழுகை வருகிறது. அதிகபட்சம் ஒவ்வரு கோவிலுக்கும் நூறு ரூபாய் மேல் என்னால் கொடுக்க முடியாது என்பது என் நிலைமை. மன்னித்து கொள் என் அன்னையே என்று சொல்லிவிட்டு. கோவில் வாசற்படிக்கு வந்தேன்.
கோவிலை துப்பரவு பண்ணும் பெண்மணியிடம் பேச்சு கொடுத்தேன். அவரின் மாத சம்பளம் 75 ரூபாய். அதுவும் ஒழுங்காக தருவதில்லை என்றும், கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் , நிலத்திற்கான கூலியை தருவதில்லை. கேட்பதற்கு எந்த அதிகாரியும் இல்லை என்று குறிப்பிட்டார். மீறி வற்புறுத்தினால் , கோவிலை பூட்டி , சாவியை காவல்துறையிடம் கொடுத்து விடு என்று சொல்கிறார்கள் என்றார். ஈசன் பால் உள்ள பற்றாலும், மடத்தின் உதவியாலும், அர்ச்சகர் கோவிலுக்கான பூஜைகள் நடத்தி கொண்டு இருக்கிறார் என்றார்.
அவர் சொல்வது எந்தளவு உண்மை என்று தெரியா விட்டாலும், கோவிலின் விரிசல்களின் நிலைமையை வைத்து அவர் சொல்வது உண்மையாக தான் இருக்க கூடும் என்று என்ன தோன்றுகிறது.
விசேச தினங்கள் மட்டும் கோவில் கூட்டம் அதிகம் வரும் போல தெரிகிறது. அவருக்கு சிறிதளவு பணம் கொடுத்து அவரின் பணிக்கு நன்றி சொல்லி விட்டு , வெளியே வந்தால் நம்பி வாழ்ந்த இடம் என்று ஒரு அலங்கோலமான இடத்தை காட்டுகிறார்கள். நம்பியின் உருவசிலை மட்டும் இங்கே நிற்கிறது. கோவிலின் நிலைமை கண்டு நம்பி திகைத்து போய் கற்சிலையாக நிற்பதாக பட்டது எனக்கு.
"நன்றி நம்பியே, நீங்கள் இல்லாமல், ஈசனை கொண்டாடும் தேவாரம் இல்லை, உங்களை கொண்டாட எங்கள் மக்களுக்கு தெரியவில்லை , மன்னித்து கொள்ளுங்கள்" , என்று அடி பணிந்து விடு அடுத்த கோவில் நோக்கி கிளம்பினேன்.
அரசாங்கம் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் ஆலயங்களை அழித்து கொண்டு இருக்கிறது. ராஜராஜ சோழன்,மிக பெரிய தமிழ் பேரரசுவை நிறுவியவன். அவன் இந்த கோவிலுக்கு . நம்பியுடன் வந்ததாக, கோவில் குறிப்புக்கள் சொல்கின்றன. எவ்வளவு பெரிய வராலற்று உண்மை. இந்த கோவில் தமிழ் மக்களின் வராலற்று பொக்கிஷம் அல்லவா. தமிழ் மன்னனின் இருப்பை உறுதி செய்யும் கல்வெட்டு அல்லவா?
கோவில் நிலங்களை மீட்டு, விற்பனை செய்து, அதை வங்கிகளில் போட்டு , வட்டியை வைத்தே கோவிலை சிறப்பாக கவனிக்கலாம் அல்லவா. ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை?
தேவாரத்தை எடுத்து தந்தவரின் இடம் தெருவில் நிற்பதா , அவர் வாழ்ந்த இடம் வீழ்ச்சியில் இருப்பதா. சிந்திப்பீர் மக்களே.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...