Saturday, October 29, 2016

ஹிந்து பேரரசு விஜய நகரம்- தமிழில் என் சிறு முயற்சி

விஜய நகரம் பற்றி ஆங்கிலத்தில் வந்த A Forgotten Empire: Vijayanagar நூலை தழுவி, தமிழில் இது வரை 20% எழுதி இருக்கின்றேன். ஒரு முறை தந்தையிடம் விஜய நகர பேரரசை பற்றி பேசி கொண்டு இருந்த போது, தமிழில் கிடைத்தால் வாங்கி கொடுப்பா என்றார். தேடினால் A Forgotten Empire: Vijayanagar நூல் தமிழில் இல்லை.

அகிலனின் வெற்றி திரு நகர் புத்தகம் தான் கிடைத்தது. ஒரு கட்டத்தில் நானே மொழி பெயர்த்தால் என்ன என்று யோசித்தேன். மொழி பெயர்க்கும் அளவிற்கு ஆங்கில அறிவு உள்ளதா நம்மிடம் என்ற தயக்கம் , மற்றும் ஏது நேரம் என்று எண்ணம். அப்புறம் அப்புறம் என்று சலிப்பு. 

விரைந்தோடும் எந்த வினாடிகளிிலும் விதி எவரையும் இழுத்து கொண்டு போய் விடும். மறு ஜென்மத்திலும் என்னை மனிதனாக மீள் எடுக்க என்னிடம் மந்திரம் இல்லை. ஆக இந்த நிமிடம் வரை நம்மை விட்டு வைத்து இருப்பது இறைவனின் கருணை. இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை.

என்னை வளபடுத்தி சுதந்திரமாக யோசிக்க வைத்த ஹிந்து மதத்திற்கு என்னை வருத்தாமல் :) ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். அதன் காப்பாளர்கள் பற்றி ஹிந்து பிள்ளைகள் அறிய வேண்டும். அதன் வெளிப்பாடு தான் இந்த சிறு முயற்சி.

தஞ்சையை கட்டியவன் சோழன், அது நம் தலைமுறை வரை பத்திரமாக காத்தவன் சந்தேகம் இல்லாமல் விஜய நகர பேரரசு. மீனாட்சி அம்மாளை காத்தவர்கள் அவர்கள். தமிழ் பெருமை பேசும் எந்த கோவிலையும் இங்கே நம்மவற்காக தருவதற்கு தன் உயிரையே விலையாக தந்தவர்கள் விஜய நகரத்தின் வீரர்கள்.

பிரசுர உரிமை பற்றி யோசிக்க வில்லை. வந்தால் பார்த்து கொள்ளலாம். ஆங்கில நூலை பொது தளத்தில் வைத்து இருக்கிறார்கள், அதனால் வராது என்று நினைக்கின்றேன். நூலை வார்த்தைக்கு வார்த்தை பிரதி எடுக்க வில்லை. அதன் வார்த்தைகளின் வளமையை ஒட்டி தான் வழுவி கொண்டு உள்ளேன்.

ராபர்ட் அவர்களின் உழைப்பு அசாத்தியமானது. தொகுப்புகளை ஆவணபடுத்த என்ன தொல்லைகள் பொறுத்தார் என்பதை அவர் மட்டும் அறிவார். ஆனால் நமக்கு ஒரு பேரரசை பரிசளித்து விட்டு போய் இருக்கிறார்.

சீக்கிரம் எழுதி முடித்து , அடுத்து நோக்கி போக வேண்டும். ஆனால் நிழலாய் நம்மை தொடரும் நிறையான இறை, எங்கே நம்மை நகர்த்தும் என்று நிர்ணயம் செய்ய முடிய வில்லை. அவன் நகர்த்தும் வரை நகர்வோம்.

ஒரு சில பக்கம் என்னை எப்போதும் அரவணைக்கும் ஒரு சில நண்பர்கள் பார்வைக்கு.

Wednesday, October 26, 2016

ஒரு கூர்வாளின் நிழலில்-என்ன நடந்தது ஈழத்தின் இறுதி யுத்தத்தில்

வெகு நாளாக தேடி கொண்டு இருந்த புத்தகத்தை தந்தை வாங்கி வைத்து இருந்தார். ஊருக்கு போன போது கொடுத்தார், பாவமாய் இருக்கிறது என்றார். “ஒருகூர்வாளின்நிழலில் “. ஈழ விடுதலை போர் ஏன் விரயமானது என்ற வினா எல்லாரிடமும் இறைந்து கிடக்கிறது. விடை தருபவர் எல்லாம் ஈழத்தில் விதையாகி போனதால் , வினா மட்டும் ஈழத்தின் வீதிகளில் விரக்தியாக உலவி கொண்டு இருக்கிறது.

முள்ளிவாய்கால்களில் முறிந்த விழுந்த தமிழ் இனத்துடன் முற்று பெறாமலே முடங்கி நிற்கிறது அந்த கேள்வி "என்ன நடந்தது இறுதி யுத்தத்தில் "
புலிகளின் மகளிரணி தலைவிக்கு கூட அது புதிராக தான் இருந்து இருக்கிறது என்பதை புத்தகத்தை படித்தால் புரிகிறது.புலிகளின் வெற்றி பற்றி பேசி கொண்டே போய் புலிகளின் தோல்வியில் புத்தகம் முடிகிறது.
“ஏன் அக்கா, உலகம் எங்கோ போய் கொண்டு இருக்க , நாம் மட்டும் காட்டின் சேற்று சகதியில் அலைந்து கொண்டு இருக்கின்றோம்” என்ற பெண் புலிகளின் ஆதங்கம் பற்றி பேசுகிறது.

யுத்தத்தின் மூலம் தேசத்தை வென்று எடுத்தால் , தப்பி போன பிள்ளைகளின் அடுத்த தலைமுறைகள் திரும்பி வந்து தேசத்தை கட்டி எழுப்பி விடும் என்று நம்பிக்கையில், தமிழ் தேசத்தின் வேர்களை ஊன்ற , தன்னையே மண்ணாகி மடியும் பிள்ளைகளை பற்றி விவரிக்கும் போது, அடுத்த பக்கத்தை புரட்ட முடியாமல் விரல்கள் விறைத்து போகிறது.

"கல்வியை விட்டு, நீங்கள் களத்தில் போராடி , உங்கள் கை இழந்து , கால் இழந்து , நீங்கள் வென்று எடுக்கும் தேசத்தில் , வேறு தேசம் நோக்கி போன பிள்ளைகள் கல்வி பெற்று மருத்தவராகவோ அல்லது இன்ஜினியரகவோ வந்து நிற்கும் போது, அவர்களுக்கு ஏவல் வேலை செய்பவராக தான் நீங்கள் இருக்க முடியும்" என்று ஒரு பெண் புலியின் தந்தையின் கோபத்தை புத்தகம் பதிவு செய்து இருக்கிறது.

இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களிலும் அண்ணே ஒரு வழி வைத்து இருப்பார் என்று பிள்ளைகள் நம்பி இருக்க, புலி தலைவர் தன் வெறும் கையை விரித்து காண்பித்த போது , இது தான் விதி என்று களத்தில் வீழ்ந்து போய் இருக்கின்றன பிள்ளைகள்.

எந்த தலைவரின் அதிரடி முடிவுகளால் , தமிழ் இனம் காக்க பட்டதோ , அதே தலைவரின் அதிரடி முடிவுகளால் தமிழ் இனம் கால சக்கரத்தில் இருந்து கழிக்கப்பட்டு இருக்கிறது என்று புத்தகம் சொல்கிறது. எனக்கு ஏற்க மனம் இல்லை, அதே நேரத்தில் மறுக்கவும் மனம் இல்லை.

ராஜீவ்காந்தி கொலை மற்றும் மற்ற மற்ற தமிழ் குழுக்களின் மீதான புலிகளின் தாக்குதல்களை தவிர்த்து பார்த்தால் , புலி தலைவர் தான் ஈழ மக்களின் நம்பிக்கையாக இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. முப்படைகள் வைத்து ஒரு தமிழ் தேசத்தை கட்ட முயன்று, முடிந்து போய் இருக்கிறார்.

புத்தகத்தின் எந்த இடத்திலும் இலங்கை ராணுவத்தை பற்றி தமிழனி சாடல் செய்யாமல் இருப்பது கொஞ்சம் நெருட தான் செய்கிறது. புத்தகம் சில இடங்களில் ஊமையாகி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சில நிகழ்வுகள் இங்கே பேச பட வில்லை.

பெண்ணாக வாழ்வதே ஒரு பெண்ணிற்கு போராட்டம் என்று சுழலில் , ஆயுதம் ஏந்தி போராடிய பெண்களின் வாழ்வு அசாத்தியமானது. யுத்தம் உயிரை ஒரு நொடியில் உறிஞ்சி விடும். சரணடைந்த பெண்ணின் உயிரை மட்டும் அல்ல உடலையும் தினம் தினம் உறிஞ்சி தின்னும் அதிகார மையத்தின் அட்டை பூச்சிகளில் இருந்து மீளவது , மறு ஜென்மத்திற்கு ஒப்பானது.

ஆதலால் தோற்று போய். சரணடைந்து, மீள் வாழ்வு பெற்று , மீண்டும் வாழ முயன்று மீண்டும் தோற்று எழாமலே போன ஒரு போராளி பெண்ணின் புத்தகத்திற்கு உள் நோக்கம் கற்பிக்க என்னால் முடிய வில்லை.
முள்ளிவாய்க்காலில் தப்பி பிழைத்த பெண் பிள்ளையை , புற்று நோய் தேடி பிடித்து புதைத்தே இருக்கிறது.

ஆனால் புத்தகம் தமிழனியை உயிர்ப்பித்து வைத்து இருக்கிறது.

கூர்வாளின் நிழலில்" இருந்து வெளியாகும் வார்த்தைகள் நம் இதயத்தை இரு கூறாக பிளந்து இருக்கிறது.

Saturday, October 8, 2016

சில பிள்ளைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது

சில பிள்ளைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. மனைவியோ , கணவனோ திருநெல்வேலியில் இருந்தால் கூட , எப்படியாவது வாரம் வாரம் விழுந்தடித்து கொண்டு ஊருக்கு போய் பார்த்து விட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் தாய் தந்தையர் வேறு ஊரில் இருந்தால் , மூன்று நான்கு , ஆறுமாதங்கள் ஆனாலும் போய் பார்ப்பதில்லை. கேட்டால் ரயில் கிடைக்க வில்லை , பேருந்து கிடைக்க வில்லை என்று சமதானம் சொல்கின்றனர் . மாதத்திற்கு ஒரு முறை கூட நம்மை பெற்றவர்களை பார்ப்பதற்கு மார்க்கம் தெரியவில்லையா?

வேறு மனைவியும் , வேறு கணவனும் தேடி கொள்ளலாம், இன்னோர் பிள்ளை பெற்று கொள்ளலாம். எல்லா உறவுகளுக்கும் உலகத்தில் மாற்று உறவு உண்டு. தாய் தந்தையருக்கு மாற்று இந்த உலகில் எந்த மனிதரும் இல்லை. எங்கும் நிறையும் இறை கூட அந்த இடத்தை நிரப்ப முடியாது.

இன்று கை நிறைய சம்பாதிக்கும் திமிரில் ,அவர்கள் வாழ தெரியாமல் வாழ்ந்தார்கள் என்று பேசாதீர்கள். அவர்கள் அறிந்தே இருந்திராத பொருளாதார யுத்த களத்தில் அவர்கள் பட்ட காயம் அறியாமல் கருத்து சொல்லாதீர்கள். தோல்வியின் வலிகளை அறிந்ததால் தான் , நமக்கு வெற்றிகளின் வழிகளை காட்டி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சேர்த்த சொத்தே நீங்கள் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் இருக்கும் போதே அவர்களிடம் உரையாடி உங்கள் உள்ளத்தை அவர்களை பற்றிய நினைவுகளால் நிரப்பி கொள்ளுங்கள் . உலகமே நம்மை உதறி தள்ளினாலும் , நமக்கு என்று அறுதியாகவும் , இறுதியாகவும் ,உள்ள ஒரே உலகம் நம் பெற்றோர். தாய் தந்தையர் போனால் அந்த வெற்றிடம், வெறுமையானது, அது முடிவானது, எந்த சலனமற்றது. அங்கே நாம் பற்றி கொள்ள இனி யாரும் இல்லை

என் பிள்ளை என் பிள்ளை என்று நம்மை கொண்டாட இனி யாரும் இருக்க போவதில்லை. அவர்களை காண இயலாததிற்கு காரணத்தை சொல்லி , காலத்தை கடத்தாதீர்கள். காலம் யாருக்கும் காத்திருக்க போவதில்லை. முதுமை முழுதாக அவர்களை நம்மிடம் இருந்து பறித்து கொள்ளும் முன்னரே அவர்கள் முன் போய் நில்லுங்கள், கூட இருந்து மகிழுங்கள்.

அவர்கள் மறைந்தால், நாம் என்ன மற்றும் ஒருமுறை, அவர்களுக்கு பிள்ளைகளாவா பிறக்க போகின்றோம்?

ரகுகுல ராமனை அவமானபடுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட தமிழ் விக்கிபீடியா

என்னால் முடிந்த வரை ராமரை பற்றிய தமிழ் விக்கிபீடியாவை மாற்றி அமைத்து இருக்கின்றேன். அவதூறு சொல்லும் பிரிவை நீக்கி இருக்கிறேன். ராமாயண வரலாற்றில் பல நற் கருத்துக்கள் சொல்லப்பட்டன அதை பற்றி மேற் கொள் காட்டாமல பல நூறு கோடி பேர் நம்பும் ராமரை பற்றி மட்டமான தொகுப்புகள் ஏற்றப்பட்டன. திராவிட கட்சிகளை பற்றி ராமர் வீக்கி பீடியாவில் ஏன் பேச வேண்டும். திட்டமிட்டு அசிங்க படுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். எல்லா மாற்று மத தெய்வங்களின் வரலாற்றிலும், புனித நூல்களிலும் முரண்பாடுகள் உள்ள கருத்துக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன , ஆனால் அந்த தெய்வங்களின் விக்கிபீடியாக்களில் அது தொகுக்க பட வில்லை. ஏன்?

ராமன் இந்த தேசத்தின் பொக்கிஷம். சரித்தர நாயகன். இந்திய வரலாற்றில் இப்படி பட்ட மனிதன் இந்த தேசத்தில் வாழ்ந்து இருக்கின்றான் என்பதே இன்று வரை எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இது சாத்தியம் சாத்தியமா என்று வினா என்னுள் தொடர்ந்து விரட்ட படுகிறது .சத்தியத்தை பற்றி படிக்கும்போது உள்ளே ஒரு சங்கடம் பரவி மெல்ல வெளியேறுகிறது. அது வேறு ஒன்றும் இல்லை அவ்வப்போது என்  மனதினுள் வந்து குடி புகும் சாத்தான், சந்தடி செய்யாமல் வெளியேறி இருக்கிறது.

சத்தியத்தை நேருக்கு நேர் சந்திக்க இங்கே எவருக்கும் துணிவு இருந்ததாக சரித்தரம் இல்லை. ராம சரிதம் படிக்கும் எந்த நெஞ்சிற்கும் இது நேரும். அவன் சத்திய புருசன் என்பது மனதினுள் சங்கல்பமாகும். ராம நாமம் நம்மை நம்மிடம் இருந்து ரட்சிக்கும்.

நற் சிந்தனைகளின் நிஜ உருவம் ராமன். பக்தியின் பரிதவிப்பில் பக்தன் எதை கொடுத்தாலும் தெய்வம் ஏற்கும். ராமன் கள் குடித்தானா , மாமிசம் சாப்பிட்டனா என்பதை பற்றி எள்ளவும் எனக்கு அக்கறை இல்லை. அவன் என்ன உபதேசம் செய்தான் என்பதில் தான் ஆர்வம் கொள்ள வேண்டும். மனதாலும் மாற்று மங்கையரை தொட மறுத்தவன் அவன். தந்தை சொல் மிக்க வார்த்தை தரணியில் இல்லை என்று வாழ்ந்த தலைவன்.

இயற்கையை இயக்கும் இறைவனே என்றாலும் , மனித உடல் எடுத்து வந்தால் , உடலுக்கு உண்டான உறவுகளின் வார்த்தைகளுக்கு உட்பட்டு வளைந்து , அலைந்து திரிந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று ராமன் கற்பித்தான் நமக்கு . ஆனால் மனித மனதில் உறையோடி போய் இருக்கும் இச்சைகளுக்கு ராமன் ஆட்பட மறுத்தான்.

கண் மூடினால் கன்னியர்களை பற்றி கனவில் கழியும் கள்வர்களுக்கு ராமன் பற்றிய பிம்பங்கள் கலவரமாக இருந்து இருக்கிறது. அவர்களால் ராமனாக மாற முடியாது, அதனால் ராமனும் அவர்களை போன்றவர் தான் என்ற கருத்தை உருவாக்க முயன்று இருக்கிறார்கள்.

அதாவது தெய்வத்தை பற்றி, மேல் எழும்ப தெரியவில்லை , தெய்வத்தை தன் நிலைக்கு கீழ் இழுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். தன் இச்சைகளை அறுக்க தெரியாமல் எச்சையாக திரியும் மனிதர்களுக்கு ராமன் சரிதம் அச்சமாக இருந்து இருக்கிறது என்பதின் வெளிப்பாடு தான் விக்கிபீடியாவில் அவர்கள் செய்து வைத்து இருந்த மாற்றங்கள்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D


கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...